ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில் ஆலமரத்தடி கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள் உள்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
இப்போட்டியை எம்எல்ஏ மு.சந்திரபிரபா முத்தையா தொடங்கி வைத்தார். இதில், மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் கூமாப்பட்டி, சேதுநாராயணபுரம், வ.புதுப்பட்டி வத்திராயிருப்பு, நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள், ஒரு குழுவுக்கு 30 பேர் வீதம் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியில் பிடிபடாத காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காயமடைந்த வீரர்களின் அவசர உதவிக்கு 3 ஆம்புலன்ஸ்களும், ஒரு தீயணைப்பு வாகனமும், 3 மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
போட்டியில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள், 3 மாடுகளின் உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் என 15 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்போட்டியையொட்டி, 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.