தமிழக அரசின் ரூ. 2000 வழங்கும் திட்டம் அனைத்து ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு ஏழை, எளிய விவசாயிகள் நேரடியாக பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6000-த்தை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
அதேபோல தமிழ்நாடு அரசும் அண்மையில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கக்கூடிய 60 லட்சம் குடும்பங்களுக்கு குறிப்பாக பட்டாசு தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதும் வரவேற்கத்தக்கது.
அதே சமயத்தில் இந்த 60 லட்சம் குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழே பட்டியல் ஆகும். இது ஒரு கிராமங்களுக்கு 20 முதல் 30 குடும்பங்களுக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. ஏழைகளாக இருக்க கூடிய அனைவருக்கும் அந்த பலன் நேரடியாக சென்று சேர அதிகாரிகள் அரசினுடைய நோக்கத்தை புரிந்துகொண்டு எந்த ஏழையும் விடுபடாத வகையில் அந்தப் பட்டியலை தயார் செய்ய வேண்டும்.
புதிய தமிழகம் கட்சி கடந்த மூன்று ஆண்டு காலங்களாக தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க கோரிக்கை விடுத்து வருகிறது. தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் பிரிவில் இருந்து நீக்க வேண்டும். உலகம் முழுவதும் ஒவ்வொரு இனமும் தங்களுடைய அடையாளத்தோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இதேபோல தேவேந்திரகுல வேளாளர்கள் என்று மட்டுமே சான்றிதழ் அளிக்க வேண்டும்.அவர்களை எஸ்.சி என்றோ பட்டியல் பிரிவு என்றோ, தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ தலித் என்று அழைப்பது குற்றம். இன்னும் சொல்லப்போனால் அது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும்.
எனவே அந்த சமுதாயம் இந்த கடந்த 60 ஆண்டு காலத்தில் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்ட காரணத்தினால் தகளது மதிப்பை இழந்து தங்களது அடையாளத்தை இழந்து வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. எனவே தமிழக அரசு மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.