வரவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, பழைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, மதுரை மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் கூறினார்.
சிவகாசி என்.ஆர்.கே. சாலையிலும், சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையங்களையும் மற்றும் ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவையும் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிவகாசி காவல் கோட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு போதிய அளவு குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள காவல் துறைக்கான மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி நகர் காவல் நிலைய கட்டடப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள இரு புறக் காவல் நிலையங்களிலும், ஒரு சிறப்பு சார்பு-ஆய்வாளர் மற்றும் இரு காவலர்கள் பணியில் இருப்பர். இதில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது பிரச்னைகளுக்கு இந்த புறக்காவல் நிலையங்களை அணுகலாம். விரைவில் மக்களவைத் தேர்தல் வர உள்ளதால், பழைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், ஆய்வாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.