அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூரில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து தினமும் தனியார் நிறுவனங்களின் தொழிலாளர்களும், பள்ளி மாணவர்களும் என நூற்றுக்கணக்கானோர் வெளியூர் சென்றுவருகின்றனர். இவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் போது பயணிகளுக்கான நிழற்குடை அமைக்கப்படாததால் வெயிலிலும், மழையிலும் வாடுகின்றனர். இதில் குறிப்பாக அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு வாராந்திர மருத்துவப் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளும், மேலும் பல்வேறு மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லும் முதியோரும், சிறுவர்களும் நிழற்குடை இன்றி கடும் அவதிக்கு ஆளாகின்றனர். ஆகவே குலசேகரநல்லூர் கிராமப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க கிராமத்தினர் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.