விருதுநகர் அருகே சின்ன மூப்பன்பட்டியில் சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் அருகே கல்லுப்பட்டி செல்லும் சாலையில் சின்னமூப்பன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கூலி தொழில் செய்து வருவதால் விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையில் உட்காரும் இடம் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மேலும் மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து இடிந்து விழுகிறது. இதனால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடையில் நிற்கவே அச்சப்படுகின்றனர்.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நிழற்குடை இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் அக்கிராம மக்கள் உள்ளனர்.
எனவே சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி பஞ்சாயத்திற்குள்பட்ட கோட்டையூர் கிராமம். சாத்தூரிலிருந்து-தாயில்பட்டி வழியாக சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோட்டையூர் பகுதியில் நின்று செல்கின்றன.
ஆனால் இந்த பகுதியில் உள்ள பேருந்து நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இந்த நிழற்குடையை அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்பில் இருந்து பேருந்து நிழற்குடையை மீட்டு, சீரமைக்க நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.