விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் சட்ட விரோதமாக விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த 400 மதுபாட்டில்களை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை வட்டத்துக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகப் புகார்கள் வந்தன. இதனையடுத்து அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆலோசனைப்படி, தாலுகா காவல் ஆய்வாளர் அன்னராசா தலைமையிலான போலீஸார் பல்வேறு கிராமங்களிலும் புதன்கிழமை இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி கிராமத்தையடுத்த தி.புதுப்பட்டியில் சந்தேகப்படும் படியாகத் திரிந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தி.புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்பாராஜ் (48) மற்றும் ராஜமாணிக்கம் (21) ஆகியோர் என்பதும் அவர்கள் வைத்திருந்த பையிலிருந்து சட்ட விரோதமாக விற்பதற்காகப் பதுக்கிவைத்திருந்த 252 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட இவர்கள் உள்பட பல்வேறு கிராமங்களிருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் தெரிவித்துள்ளனர்.