விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை, சிவகாசி பகுதியில் 3 இடங்களில் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளையே தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 75 நாள்களாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட பட்டாசு-தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு)சார்பில், சிவகாசி பகுதியில் 3 இடங்களில் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், அச்சங்கத்தின் மாவட்டச் செயலர் பி.என். தேவா, துணைத் தலைவர் ஜெ. லாசர், வி.என். ஜோதிமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் கே. முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக சனிக்கிழமை 7 இடங்களில் கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடைபெற்றது.