விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
அருப்புக்கோட்டை நகரைச் சேர்ந்த மகேஸ்வரி(57 தனது பேத்தியுடன் இரு சக்கர வாகனத்தில் கடைத் தெருவுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனத்தை பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் மகேஸ்வரி கழுத்திலிருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
அதேபோல அருப்புக்கோட்டை நகர் சிதம்பர நாடார் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகள் பிரேமலதா(42) ஞாயிற்றுக்கிழமை இரவு தனது தந்தை வீட்டுக்குச் செல்ல சிதம்பர நாடார் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் பிரேமலதா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுதொடர்பாக மகேஸ்வரி மற்றும் பிரேமலதா ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை நகர் போலீஸார் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.