பட்டாசுத் தொழிலுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறினார்.
சிவகாசியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை பெண்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழிக் குஞ்சுகளை வழங்கி அவர் பேசியது:
ஏழை பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் விலையில்லா கறவை மாடு, விலையில்லா ஆடுகள் உள்ளிட்ட திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 2,200 பயனாளிகளுக்கு ரூ 1.41 கோடி மதிப்பாலான கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும்.
பட்டாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நல்ல தீர்ப்பாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டாசுத் தொழிலுக்கு தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
சாத்தூர்: இதைத்தொடர்ந்து சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேர்தல் களத்தில் இருக்கப் போவது அதிமுக மற்றும் திமுக மட்டும் தான். மற்றக் கட்சிள் களத்திலேயே இல்லை. மோடி ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது. ஆனால் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்றார்.