எரிச்சநத்தம் அருகே கிணற்று பாசனத்தில் கோடை விவசாயமாக பயிரிடப்பட்டுள்ள மிளகாய் செடிகள் காய்த்து குலுங்குகின்றன. தற்போது, பச்சை மிளகாய் கிலோ ரூ. 60 வரை விற்பனையாவதால் போதிய லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
விருதுநகர்- அழகாபுரி செல்லும் சாலையில் எரிச்சநத்தம் பகுதியில் கோடை விவசாயமாக மிளகாய் செடிகள் பயிரிடப்பட் டுள்ளன. கிணற்று பாசனம் உள்ள சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் மட்டுமே மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மிளகாய் நாற்று நடவு செய்து, அது 35 நாள்கள் வளர்ந்த பின்னர் வேருடன் பறித்து, வயல்களில் நடவு பணி செய் கின்றனர். அதற்கு முன்னதாக ஒரு ஏக்கர் நிலத்தில் மிளகாய் நடவு பணிக்கு உழவு, களை எடுத்தல், பூச்சி வராமல் தடுக்க மருந்து அடிக்கும் பணி, தண்ணீர் ஆகியவற்றிற்காக ரூ. 15 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர். மிளகாய் நாற்று நடவு செய்து 2 மாத காலத்திற்கு பின்னர் மகசூல் தர ஆரம்பிக்கிறது. பச்சை மிளகாயாக இருக்கும் பருவத்தில் அதை பறித்து வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 10 குவிண்டால் வரை பச்சை மிளகாய் கிடைப்பதால் ஓரளவு போதிய லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர். மேலும், பணப் பயிரான பச்சை மிளகாயை இது போன்ற கோடை காலத்தில் பயிரிடுவதால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.