திருச்சுழி வட்டம் ம.ரெட்டியபட்டியை அடுத்துள்ள மறவர் பெருங்குடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தில் கடந்த 2003-2004 ஆம் நிதியாண்டில் மறவர்பெருங்குடி ஊராட்சி மூலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது.
இது அருகருகே உள்ள இரண்டு கிராமங்களான மறவர்பெருங்குடி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய கிராம மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிலையில் அவ்வலுவலகம் செயல்பாட்டிற்கு வராமல் பல ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது.
ஆனால் இக்கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகம் காரணமின்றி அருகிலுள்ள ம.ரெட்டியபட்டியில் செயல்படுகிறது. இதனால் மறவர்பெருங்குடி ஊராட்சி நிதி விரையமானதுடன், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், விவசாயிகளுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பல்வேறு சான்றிதழ்களைப் பெற ம.ரெட்டியபட்டிக்குச் செல்ல நேரிடுவதால் காலவிரையம் மற்றும் பணவிரையமாவதுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மறவர்பெருங்குடிகிராம நிர்வாக அலுவலர் பதவி காலியாக உள்ளதால், வேடநத்தம் கிராம நிர்வாக அலுவலர் தான் மறவர்பெருங்குடி, மீனாட்சிபுரம் கிராமங்களையும் கூடுதல் பொறுப்பாகப் கவனிப்பதாக கூறப்படுகிறது.
எனவே மறவர்பெருங்குடி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களுக்குக் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு ஒருவரை நியமனம் செய்து, அதற்கென மறவர்பெருங்குடியில் கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை செயல்பாட்டிற்குக் கொண்டுவர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.