அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் அரசு உறுப்புக் கல்லூரியில் சேதமடைந்துள்ள கழிப்பறையை விரைவில் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
இக்கல்லூரியில் சுமார் 700-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக் கல்லூரியின் கட்டடம் கட்டப்பட்டு சுமார் இரண்டரை ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் முதல் மாடியில் உள்ள மாணவர்களுக்கான கழிப்பறைக் கட்டடத்தின் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், அதில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கசிவால், தரைத்தளத்தில் அமைந்துள்ள கழிப்பறைகளையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே இக் கழிப்பறைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.