ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் கிராமத்தில் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கிராமத்தில் வாருகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மழைக் காலங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவுகிறது.
இங்குள்ள சத்துணவு மைய கட்டடத்தில் ஆங்காங்கே துளைகள் இருப்பதால், பாம்பு, தவளை உள்ளிட்ட விஷ பூச்சிகள் உள்ளே நுழைகின்றன. மேலும், கிராமத்திலுள்ள தனியார் அரிசி ஆலையிலிருந்து சாம்பல் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுவதால் காற்று மாசுபடுகிறது.
எனவே, இளந்திரைகொண்டான் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், சாம்பல் கொட்டுவதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.