காரைக்கால் மருத்துவக் கல்லூரியில், 1,500 மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன் தலைமை வகித்து, மரக்கன்றுகளைக் கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் இருதரப்பினரும் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அம்புஜம் மற்றும் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் ராமகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.துணை ஆளுநர் ராமகிருஷ்ணன் பேசும்போது, மரங்கள் மிகவும் இன்றியமையாதவை. மெட்ரோ நகரங்களில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதைக் களைவதற்கு மரங்கள் தேவைப்படுகின்றன. மரங்கள் கரியமில வாயுவை தன்னகத்தே ஈர்த்துக்கொண்டு ஆக்ஸிஜனை தருகின்றன. எனவே மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் என அனைத்து தரப்பினரும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.