காரைக்கால் பெருமாள் கோயிலில் பவித்ரோத்ஸவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (நவ.16) தொடங்குகிறது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில், 8-ஆம் ஆண்டாக பவித்ரோத்ஸவம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு வாஸ்து ஹோமத்துடன் தொடங்குகிறது. இதையடுத்து, 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் காலை, மாலை என இருவேளையிலும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மகா பூர்ணாஹுதி தீபாராதனை, கடம் புறப்பாடு, பிரம்ம கோஷம் ஆகியன நடைபெறுகின்றன. மூலவர், உத்ஸவர் உள்ளிட்டோருக்கு பட்டு நூல் கொண்ட மாலை சாற்றப்படுகிறது.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, பவித்ரோத்ஸவம் என்பது ஆண்டில் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இது குடமுழுக்கு விழாவுக்கு நிகரானது. 3 நாள்களும் புனிதநீர் யாகசாலையில் வைத்து, பூஜை செய்து சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
கோயிலில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமாயின், அதைப் போக்கி, கோயிலைப் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியாக பவித்ரோத்ஸவம் வைணவ தலங்களில் நடத்தப்படுகிறது. இந்த மூன்று நாளில் மூலவர், உத்ஸவரை வழிபடும்போது, பக்தர்களும் புனிதமடைகிறார்கள் என்பது ஐதீகம். கோயிலில் ஆண்டு முழுவதும் வந்து தரிசித்த பலனை, இந்த மூன்று நாளில் தரிசிப்பதன் மூலம் பெறலாம் என்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கைலாசநாதர், நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் மேற்கொண்டுள்ளனர்.