புயல் காற்றில் காரைக்கால் கடலோரத்தில் நிறுத்தியிருந்த ஃபைபர் படகுகள் வியாழக்கிழமை இரவு ஒன்றுடன் ஒன்று மோதி சுமார் 120 படகுகள் சேதமடைந்து விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பட்டினச்சேரி, வடக்கு வாஞ்சூர், காரைக்கால் மேடு முதல் காளிக்குப்பம் வரையிலான 11 மீனவ கிராமத்தினர், தினமும் அதிகாலை நேரத்தில் மோட்டார் ஃபைபர் படகில் மீன்பிடிக்கச் செல்வர். இவர்கள் கரையோரத்தில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்துவது வழக்கம். காரைக்கால் மாவட்டத்தில் 600 -க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உள்ளன.
புயல் வருவதைக் கருத்தில் கொண்டு கரையில் கூடுதல் பாதுகாப்பு முறையில் படகுகளை நிறுத்தியிருந்தனர். புயல் காற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக வீசியதும், கடல் நீர் ஆர்ப்பரித்து கரையை நோக்கிச் சென்றதால், படகுகள் பல வெகுதூரத்துக்கு அடித்துச் செல்லப்பட்டன. ஒன்றுடன் ஒன்று மோதியும், கடலோர சவுக்குத் தோப்பிலும் படகுகள் சிதறிக் கிடந்தன. இவை 120 அளவில் சேதமடைந்திருப்பதாகவும், இதை இனிமேல் இயக்க முடியாது எனவும், புதுவை அரசு நிவாரணம் தர வேண்டும் என மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.