திருநள்ளாறு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதுகாப்பு முகாம்களுக்கு நேரில் சென்று, அமைச்சர் ஆய்வு நடத்தினார்.
கஜா புயலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பு முகாமில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இவற்றில் பெரும்பாலான முகாம்கள் திருநள்ளாறு பகுதியில் அமைந்திருந்தது. புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஓய்ந்த பிறகு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், திருநள்ளாறு பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று, பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். கண்ணாப்பூர் கிராமத்தில் சகாய மாதா ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளோரை சந்தித்த அமைச்சர், புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, உணவு மற்றும் இதர பொருள்கள் கையிருப்பில் உள்ளதா என இல்லத்தின் காப்பாளரிடம் கேட்டறிந்தார். தேனூர் அரசுப் பள்ளி மற்றும் பல்வேறு மையங்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த அமைச்சர், உணவு நேரத்தோடு தரப்படுகிறதா போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.
பல்வேறு கிராமங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த அமைச்சர், குடிசைகள் சேதமடைந்திருக்கிறதா போன்ற தகவல்களை கேட்டறிந்து, கிராமத்தினருக்கு ஆறுதல் கூறினார்.