காரைக்கால் கடற்கரையோர மக்கள், கடற்கரைக்குச் செல்வோருக்கு தொற்றுநோய் வராமல் தவிர்க்கும் வகையில் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : கஜா புயல் காரணமாக இறந்த மான்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் காரைக்கால் கடற்கரையோரத்தில் ஒதுங்குகின்றன. இவற்றை அரசுத் துறையினர் அப்புறப்படுத்தும் பணிகளை செய்து வருகின்றனர். இதன்மூலம் தொற்று நோய் வராமல் இருக்க கால்நடைத் துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடற்கரையோரம் வசிப்போர் மற்றும் கடற்கரைக்குச் சென்று வருவோர் குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும். உணவுப் பொருள்களை ஈ மொய்க்காதவாறு மூடி வைத்திருக்க வேண்டும். ஈ மொத்த உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்ணும் முன்பாகவும், கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னரும் கைகளை சோப்பு மூலம் நன்கு கழுவ வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.