கந்த சஷ்டி விழா நிறைவைத் தொடர்ந்து, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் கடந்த 8 -ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 13 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆட்டுக் கிடா வாகனத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோயிலில் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் திருக்கல்யாணத்துக்காக வியாழக்கிழமை இரவு பரிச வழிபாடும், சனிக்கிழமை இரவு கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றன. திருக்கல்யாணத்தையொட்டி, ஸ்ரீ பார்வதி ஸ்ரீ பரமேஸ்வரன் ஆசியுடன் ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகப் பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சிவாச்சாரியார் வள்ளி மற்றும் தெய்வானைக்கு திருமாங்கல்யதாரணம் செய்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றதது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.