உலக மீனவர் தினத்தையொட்டி, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் ஒருங்கிணைந்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் ஏ.பாஸ்கரன், மாவட்ட மீனவரணி தலைவர் ஏ.எம்.கே.அரசன், சிறுபான்மைத்துறைத் தலைவர் எல்.எஸ்.பி. சோழசிங்கராயர் உள்ளிட்டோரும், பல்வேறு மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மீனவ சமுதாயத்தை சேர்ந்தவரான சிங்காரவேலர், சுதந்திரப் போராட்ட தியாகி. கடந்த 1922 -ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு பொது உடமை இயக்க பிரதிநிதியாக தம்மை அறிமுகம் செய்து, உழைக்கும் வர்க்கத்துக்கு பாடுபட்டவர். 1923-ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடிய முதல் மனிதர். 1925-ஆம் ஆண்டு பொது உடமைக் கொடியை ஆங்கிலேய ஆதிக்கத்தின்போதே ஏற்றியவர். இதுபோன்ற பல போற்றுதலுக்குரியவராக சிங்காரவேலர் கருதப்படுகிறார் என்றும், உலக மீனவர் தினத்தில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டதாகவும் மீனவ பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர்.