காரைக்கால் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்சாரத்தை விநியோகிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது என்றார் ஆட்சியர் ஆர். கேசவன்.
கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து, மின் கம்பிகள் பல இடங்களில் அறுந்து விழுந்து, முற்றிலும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. காரைக்கால் பகுதியில் உள்ள 220 மின்துறை நிரந்தர ஊழியர்கள், 50 ஒப்பந்த ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து 150 மின்கம்பங்கள் மற்றும் சாதனங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் படிப்படியாக 16-ஆம் தேதி இரவிலிருந்து மின்விநியோகம் வழங்கப்பட்டது. எனினும் இது முழுமையாக நிறைவுபெறவில்லை என பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஆர். கேசவன் கூறியது: மாவட்டத்தில் மின்விநியோக சீரமைப்புப் பணி செவ்வாய்க்கிழமை இரவுடன் நிறைவுபெற்றுள்ளது. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தனித்தனி வீடு, கட்டடங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் நகரப் பகுதியில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவனத்தினர் மரக்கிளைகள் மற்றும் தழைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் எந்தவொரு பகுதியில் மரம் விழுந்து அப்புறப்படுத்தாமல் இருந்தாலும், அந்த இடத்தை குறிப்பிட்டு கட்செவி அஞ்சல் எண்ணில் தகவல் தெரிவிக்க கோரி வருகிறோம். அதன்படி, வரும் தகவல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழைநீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவாமல் இருக்க நலவழித் துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு ஒழிப்புக்கான புகை மருந்து மாவட்டம் முழுவதும் பரப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இலவச தொலைப்பேசி எண் 1070, 1077 மற்றும் கட்டுப்பாட்டு அறை எண் 04368-228801, 227704, வாட்ஸ் அப் எண் 9488770024 ஆகியவற்றில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார்.