காரைக்காலில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என ஊழியர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டக் குழு செயலர் மனோகர் புதன்கிழமை கூறியது :
கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கான 16 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி 50 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர் ஒருவர் குடும்பத்துக்குத் தேவையான நிதியாதாரம் இல்லாத நிலையில், மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த பிரச்னைக்குப் பிறகு 5 மாத ஊதியத்தை வழங்குவதாக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. குடும்பம் நடத்துவதற்குத் தேவையான நிதியாதாரமில்லாமல் ஊழியர்களிடையே மிகுந்த மனவேதனை காணப்படுகிறது. ஒரு ஊழியர் செய்த தவறை போன்று மற்றவர்களும் செய்யும் நிலை ஏற்படக்கூடாது. அதற்கேற்ப அரசு நிர்வாகம் உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும். ஊழியர்கள் அனைவரும் சொந்த வீட்டில் குடியிருக்கவில்லை. பெரும்பான்மையினர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இதனால் வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், பள்ளிக் கட்டணம் உள்ளிட்டவை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளோம். நிம்மதியான உறக்கம் இல்லை. மன நிறைவுடன் சாப்பிட்டு நாள்கள் பல கடந்துவிட்டன. புதுச்சேரி ஆட்சியாளர்கள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி, ஊழியர்களுக்கான ஊதிய நிலுவையை வழங்கி, பணி செய்யும் சூழலை அமைத்துத் தர வேண்டும் என்றார் அவர்.