ஊதியம் வழங்காததைக் கண்டித்து காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர், ஊழியர்கள் திங்கள்கிழமை 3-ஆம் நாளாக உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
புதுச்சேரி அரசின் பிப்மேட் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும் பகுதிநேர ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதிய நிலுவை இருக்கிறது என ஊழியர்கள் தரப்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வு காண கோரப்படுகிறது.
அரசு கல்லூரிகளுக்கு மட்டுமே மாத இறுதியில் ஊதியம் வழங்கப்படுவதாகவும், அரசின் நிறுவன அமைப்பின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு ஊதியம் தரப்படுவதில் மட்டும் விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் காரைக்காலில் செயல்படும் 2 தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள், அமைச்சக ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் என அனைவரும் கடந்த வியாழக்கிழமை உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக நீடித்த நிலையில், அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தீர்வுகள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊதியம் வழங்கல் தொடர்பாக தெளிவான அறிவிப்பு அரசுத் தரப்பிலிருந்து வராததால், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி ஊழியர்கள் திங்கள்கிழமை 3-ஆம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர்.
வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற விரிவுரையாளர்கள், ஊழியர்கள், கல்லூரி முகப்பில் ஒன்று திரண்டு பணிக்குச் செல்வதைத் தவிர்த்தனர்.
இதுகுறித்து விரிவுரையாளர்கள் தரப்பில் தெரிவித்தது : 3-ஆம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகிறோம். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் அமைப்பினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 17 தேதியாகியும், அரசு நிறுவன நிரந்தர ஊழியருக்கு கடந்த ஆகஸ்ட் மாத ஊதியம் தரப்படவில்லை. அவுட்சோர்சிங் ஊழியர்களுக்கு 4 மாதமாக ஊதியம் தரப்படவில்லை. 4 மாத ஊதியமும், எங்களது ஆகஸ்ட் மாத ஊதியமும் தரப்பட்டால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொண்டு பணிக்குத் திரும்புவோம் என்றனர்.