கோட்டுச்சேரியில் சட்டப் பணிக் குழு சார்பில் நீதிபதிகள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் சேவைகள் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (செப். 18) நடைபெறுகிறது.
காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் தாலுகா சட்டப் பணிகள் குழு சார்பில், மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு பல்வேறு வழக்குகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த சட்டப் பணிகள் குழுவின் மற்றொரு பணியாக, நீதிபதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்புடன் சேவைகள் சிறப்பு முகாம் நடத்தப்படுகின்றன.
காரைக்காலில் முதல் முறையாக நடத்தப்படவுள்ள இந்த முகாம், கோட்டுச்சேரி பகுதியில் உள்ள மு. சிங்காரவேலுப் பிள்ளை திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து காரைக்கால் தாலுகா சட்டப் பணிகள் குழுவின் தரப்பில் திங்கள்கிழமை கூறியது :
அரசுத்துறைகள் சார்ந்த நலத் திட்டங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடையும் விதத்தில் இந்த சேவை முகாம் நடத்தப்படுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்பார்கள்.
வருவாய்த்துறை, வேளாண் துறை, மீனவர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, மாவட்ட தொழில் மையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சமூக நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, தொழிலாளர் நலத்துறை, நில அளவைத் துறை, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து, பொது சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு மதிய உணவு அங்கேயே தரப்படுகிறது. பொதுமக்கள் திரளாக பங்கேற்று முகாமின் பயனை அடையலாம். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கொம்யூன் வாரியாக காரைக்கால் பகுதியில் இந்த சேவை முகாம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.