கோட்டுச்சேரி பகுதி பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓட்டுநர் தினத்தை நாடு முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்யும் முகாமாக நடத்தி வருகிறது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் இயங்கி வரும் ஐ.ஓ.சி. டீலரான பிரியங்கா ஏஜென்சீஸ் பங்க்கில் திங்கள்கிழமை ஓட்டுநர்களுக்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா முகாமில் கலந்துகொண்டு, பரிசோதனையை தொடங்கி வைத்தார். காரைக்கால் வாசன் ஐ கேர் மையத்திலிருந்து கண் மருத்துவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் கலந்துகொண்டு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில் சுமார் 150 பேர் பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில், பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகி சண்முகம், ஐ.ஓ.சி. உதவி மேலாளர் முகம்மது செரீஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஐ.ஓ.சி. டீலர் பெட்ரோல் விற்பனை நிலையங்களில், இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக ஐ.ஓ.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.