விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்கலில் தொடர்ந்து இழுபறி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்கலில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதாகவும், காரைக்காலில் ஒரு தொகுதியில் மட்டுமே கடன் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் காரைக்கால் வட்டச் செயலாளர் எஸ்.எம். தமீம் புதன்கிழமை கூறியது:
தொடக்கக் கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தில் விவசாயிகள் கூட்டுறவு கடனுக்கு விண்ணப்பித்து, ஏக்கருக்கு ரூ.23 ஆயிரம் வீதம் கடன் பெறலாம். காரைக்காலில் வேளாண் பணிகள் தொடங்கிவிட்ட நிலையில், இன்னும் முறையாகக் கூட்டுறவு கடன் தரப்படவில்லை. கணக்கு தொடங்க வேண்டும் எனவும், ஆதார் இணைப்புப் பணி நடைபெறுவதாகவும் பல்வேறு தகவல்களைக்கூறி விவசாயிகளை இழுத்தடிக்கின்றனர்.
காரைக்காலில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், திருநள்ளாறு தொகுதியில் மட்டும் 40 விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் கூட்டுறவு சங்கங்கள் கவனம் செலுத்தி, பிற பகுதி விவசாயிகளை இழுத்தடிப்பதை ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, கூட்டுறவு கடன் எளிய முறையில் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.