புதுச்சேரி வக்ஃபு வாரியத் தலைமை செயல் அதிகாரியை நியமித்து, அதைத் தொடர்ந்து வாரியத் தலைவர், உறுப்பினர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சோஷியலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (எஸ்.யு.சி.ஐ) கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜெ.முகம்மது பிலால் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுச்சேரியில் முந்தைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது வக்ஃபு வாரியம் காலாவதியானது. இதுவரை தற்போது ஆளும் காங்கிரஸ் அரசு அதனை வலிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வாரியத் தலைவர், உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் உட்கட்சி பூசல் இருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.
வக்ஃபு வாரியத்திற்கு இஸ்லாமியர் ஒருவரை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க அரசு தயக்கம் காட்டிவருவதைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக தனி செயல் அதிகாரி இல்லாததால், பல பள்ளிவாசல்கள் புனரமைப்பு, இதர பணிகள் முடக்கம் உள்ளிட்டவையால், இந்து சமய நிறுவனங்கள் சார்ந்த தலைமை செயல் அதிகாரியை தினமும் நாடவேண்டிய நிலை புதுச்சேரியில் உள்ளது. பல பள்ளிவாசல்களில் முத்தவல்லிகளின் பதவிக் காலம் நிறைவு, சில முத்தவல்லிகள் வயது மூப்பு காரணமாக செயல்படாதது உள்ளிட்டவற்றால் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளன. வக்ஃபு சொத்துகளைத் தனியார் சூறையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுக்குப் புகாராகத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி மாநில வக்ஃபு வாரியத்துக்கு தலைமை செயல் அதிகாரியை உடனடியாக நியமிப்பதோடு, வாரியத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையையும் தீவிரப்படுத்தவேண்டும்.
இதில் அலட்சியம் காட்டப்படும்பட்சத்தில் இஸ்லாமிய இயக்கங்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியிலும், காரைக்காலிலும் தொடர் போராட்டங்களைத் தமது கட்சி நடத்தும் என்றார்.