ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் புதிய பள்ளியறை திறப்பு
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் புதிதாக அமைக்கப்பட்ட பள்ளியறை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததாக, புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டதாக ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைணவத் திருத்தலங்களில் நடைபெறக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகள், வழிபாடுகள் போல நடத்தப்பட்டாலும், கோயிலில் பள்ளியறை இல்லாத குறை நீடித்தது. பக்தர்கள் நன்கொடை மூலம் ரூ.3.50 லட்சம் செலவில் புதிதாக பள்ளியறை அமைக்கப்பட்டது. பள்ளியறையின் பிரதிஷ்டை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், ஸ்ரீ செங்கமலத் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. விசேஷ தீபாராதனைக்குப் பின் பள்ளியறை திறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். பள்ளியறைக்குள் சென்று அலங்காரத்தை அவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கோயில் தனி அதிகாரி ஏ.ரங்கராஜன் செய்திருந்தார்.