புதுச்சேரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டியில் காரைக்கால் அண்ணா கல்லூரி அணியினர் 2 -ஆவது பரிசு பெற்றனர்.
புதுவை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டி கடந்த 21 முதல் 23 -ஆம் தேதி வரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 10 கல்லூரிகள் பங்குகொண்டன. புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லூரி அணியினருக்கும், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அணியினருக்கும் இடையே இறுதிப் போட்டி நடைபெற்றது. 2-ஆவது இடத்தை காரைக்கால் கல்லூரி பெற்றது. கோப்பை மற்றும் சான்றிதழை பல்கலைக்கழக விளையாட்டுத் துறை இயக்குநர் கே. சுல்தானா வழங்கினார். காரைக்கால் கல்லூரி முதல்வர் சி. குணசேகரனை, உடற்கல்வி இயக்குநர் ஆர். சவரிராஜன், மார்க்கர் வீரப்பன் ஆகியோருடன் மாணவர்கள் சந்தித்தனர். மாணவர்களின் வெற்றிக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.