மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை திரளானோர் மூதாதையர்களுக்கு தர்ப்பண பூஜை செய்தனர்.
மாசி மகத்தையொட்டி காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும் நாளில், அதிகாலையிலேயே திரளானவர்கள் கடலில் நீராடி, மூதாதையர்களுக்கு தர்ப்பண பூஜை நடத்துவது வழக்கம். நிகழாண்டு மாசி மகத்தையொட்டி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் கடற்கரைக்கு சென்றனர். கடலில் நீராடி சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர். இதற்காக திருமலைராயன்பட்டினம் மற்றும் பட்டினச்சேரி பகுதியில் வாழையிலை, பழங்கள் விற்பனை மையங்கள் ஆங்காங்கே இருந்தன. வெளியூர்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பூஜை செய்யும் சிவாச்சாரியார், குருக்கள் வந்திருந்தனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தர்ப்பணம் கொடுக்க வந்தோர் இரு வரிசைப்படுத்தி, ஒவ்வொரு வரிசைக்கும் சுமார் 50 பேர் வீதம் அமரச்செய்து பூஜை செய்யப்பட்டது. காலை 5 மணிக்குத் தொடங்கிய தர்ப்பண பூஜை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. கடற்கரைக்கு சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருசக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவலர் குழுவினர் தீவிர பணியாற்றினர்.