காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவர்கள் 110 பேருக்கு நேர்காணலில் பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பு உயர்கல்வி நிறுவனமான காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் பல்வேறு துறையில் பயிலும் மாணவர்களுக்கு, நிறுவன வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் விதமாக வளாக நேர்காணலை கல்லூரி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் பணி வாய்ப்பு பெறுகின்றனர்.
அந்தவகையில், கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மாணவர்களுக்கான வளாக நேர்காணல் திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி தலைமை வகித்தார்.
சென்னை சிம்சன் நிறுவனத்திலிருந்து மனிதவள மேலாளர் எஸ்.ராஜா மற்றும் செயல் அதிகாரி கே.ஹரிகரன் ஆகியோர் பங்கேற்று நிறுவன நியமன விதிமுறைகள் குறித்துப் பேசினர்.
நிறுவன அதிகாரிகள், தங்களது நிறுவனத்தில் உள்ள பணி நிலவரம் குறித்தும், தேர்வு செய்யப்படுவோருக்கு பிற்கால நலன்கள் குறித்தும் பேசினர். நிறுவனத்தின் சார்பில் மாணவர்களிடையே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டத்தில், 110 பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.
மாணவர்கள் கல்வி முடித்து நிறுவனத்தில் சேரும்போது மாதம் ரூ.10,750 ஊதியம் தரப்படும். பின்னர் படிப்படியாக ஊதியம் உயரும் என நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் விரிவுரையாளர் ஜெ.ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். துறைத் தலைவர்கள் டி.கந்தன், எஸ்.ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.