கிராம மக்களுக்கு தொழிலாளர் துறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சமூகப் பணித்துறை மற்றும் அரசின் தொழிலாளர் நலத்துறை இணைந்து, தொழிலாளர் துறையில் உள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, நிரவி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரி சமூகப் பணித் துறைத் தலைவர் கே. சிவகுமார் தலைமை வகித்துப் பேசினார். தொழிலாளர் துறையின் உதவி ஆய்வாளர் கே. ராஜ்குமார் கலந்துகொண்டு, துறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு, இவற்றின் மூலம் பயன்பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மக்களிடையே விளக்கிப் பேசினார்.
சமூகப் பணித் துறை உதவிப் பேராசிரியர் டி. பீட்டர் அந்தோனி, தொழில் தர்மம் என்ற தலைப்பில் பேசினார்.
கல்லூரி சமூகப் பணித்துறை முதுகலை 2 -ஆம் ஆண்டு மாணவி எஸ். அருட்செல்வி வரவேற்றார். 2-ஆம் ஆண்டு மாணவி வி. ஆதிரை நன்றி கூறினார். கிராமத்தைச் சேர்ந்த 30 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.