நாகை: 8 இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டத்தில் உள்ள 8 வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பொறுப்பூதியம் கடந்த ஓராண்டாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், நாகை மாவட்டத்தில் நாகை,வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூர், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய 8 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகையில்...
நாகையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் நாகை வட்டத் தலைவர் கே. மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் பி.வீரமணி உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கீழ்வேளூரில்...
கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்க வட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 37 பே ர் கலந்துகொண்டனர்.
திருக்குவளையில்...
திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்க வட்டத் தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவர்கள் 17 பேர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத் தலைவர் திருமலைச்சங்கு தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் மாரியப்பன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். வட்டச் செயலாளர் என். குமரவேல், பொருளாளர் எஸ்.குமரன் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
குத்தாலத்தில்...
குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கச் செயலர் ராஜ்மோகன், பொருளாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.