பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி நாகையில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை அவுரித் திடலில் ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் எம்.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மத்திய அரசு வழங்குவதுபோல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ 1.50 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், வட்டச் செயலர் வி. மாரிமுத்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலர் பி. அந்துவன்சேரல், மாவட்டச் செயலர் டி. இளவரசன், ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோ. சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செம்பனார்கோவிலில்... செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் இளமுருகு செல்வன், இணைச் செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வட்டக் கிளைத் துணைத் தலைவர் ராஜாராமன் நன்றி கூறினார்.