தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட திருவிளையாட்டம், காழியப்பநல்லூர், ஆக்கூர், திருக்கடையூர், ஆயப்பாடி, தில்லையாடி,பொறையாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். கூட்டத்தில், பொறையாறு, ஆண்டாஞ்சேரி, கோரையாறு பாசன வாய்க்கால் மற்றும் ஒழுகைமங்கலம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை தூர்வார வேண்டும், விவசாயிகளின் நிகழாண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும், காவிரி நீர் அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் வந்து சேர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் வட்டாட்சியர் சுந்தரம். கூட்டத்தில், வேளாண் துறை உதவி அலுவலர் உமாபசுபதி, மண்ட துணை வட்டாட்சியர் மகேந்திரன், முதுநிலை ஆய்வாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.