சீர்காழி பகுதியில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் 50 ஏக்கரில் வாழை மரங்களும், 30 ஏக்கரில் பொங்கல் கரும்புகளும் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. இதேபோல், சுமார் 30 ஏக்கரில் பொங்கல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இவைகள் நன்கு வளர்ந்து இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை கஜா புயல் நாகை-வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தபோது அடித்த பேய்க் காற்றால் அல்லிவிளாகம், காத்திருப்பு,செம்பனிருப்பு பகுதிகளில் விளைவிக்கப்பட்டிருந்த வாழை, கரும்புகள் 60 சதவீதம் சாய்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து, வாழை விவசாயி முத்துக்குமரன் கூறியது: அல்லிவிளாகம், காத்திருப்பு, செம்பனிருப்பு பகுதிகளில் 50 ஏக்கரில் வாழை, 30 ஏக்கரில் கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. கடன் பெற்று ஆயிரம் வாழைக்கு ரூ.1 லட்சம் வரையிலும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும் செலவு செய்து பராமரித்து வந்தோம்.
இந்நிலையில் கஜா புயலால் பொங்கல் கரும்பும், வாழையும் இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சேதத்திலிருந்து விவசாயிகள் ஓரளவுக்கு மீண்டு வரும் வகையில் அரசு வாழை 1 க்கு ரூ. 200 வீதம் சேதம் ஏற்பட்ட வாழைகளை கணக்கிட்டும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ. 50ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றார்.