கஜா புயல் சீற்ற பாதிப்புகள் குறித்து நாகை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
நாகை ரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களையும், இருப்புப் பாதைகளையும் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ரயில் பயணிகளைச் சந்தித்து, புயல் சீற்றத்தின்போது அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த அவர், பயணிகளுக்கு ரொட்டி, பிரட் உள்ளிட்ட உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தது : புயல் சீற்றம் காரணமாக ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளிலிருந்து சனிக்கிழமை முதல் ரயில் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் இருப்புப் பாதைகளில் முறிந்து கிடந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான நடவடிக்கைகள் ரயில்வே காவல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.