நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கடைவீதியில் புயல் பாதிப்பை அரசு அலுவலர்கள் பார்வையிடாததைக் கண்டித்தும், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யக் கோரியும் புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பஞ்சநதிக்குளம் மேற்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போதிய அளவில் கிடைக்கவில்லை. குறிப்பாக, தகட்டூர் கடைவீதியில் சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பம் அகற்றப்படாததால், குடிநீர் ஏற்றிய டேங்கர் லாரிகள் பஞ்சநதிக்குளம், தென்னடார் கிராமங்களுக்குச் செல்ல முடியவில்லை.
இதைக் கண்டித்தும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும் பொதுமக்கள் தகட்டூர் கடைவீதியில் சாலையில் சமையல் செய்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களும், மீட்பு வாகனங்களும் முடங்கின.
தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், சுமார் 3 மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.