புயல் சீற்றம் காரணமாக, கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் இறந்த வனவிலங்குகளைப் புதைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம், திருப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் புயல் சேத சீரமைப்புப் பணிகளை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தது :
வேதாரண்யம் தொகுதியில் உள்ள 61,720 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் 1,110 டன் அரிசியுடன், கூடுதலாக தலா 5 கிலோ வீதம் விலையில்லா அரிசி வழங்க 3,086 டன் அரிசி நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் நகராட்சிப் பகுதிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாலைகளில் சாய்ந்துள்ளன. சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில், 3 மாநகராட்சிகள், 7 நகராட்சிகளைச் சேர்ந்த 212 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, 7 ஜேசிபி இயந்திரங்களும், 30 மரம் அறுக்கும் இயந்திரங்களும், 15 லாரிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வேதாரண்யம் பகுதியில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாய் சரிசெய்யப்படாத பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் இறந்த வனவிலங்குகளை உடற்கூறு ஆய்வுக்கு உள்படுத்தி, புதைக்கும் பணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்கா கால்நடை மருத்துவக் குழுவினர் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்ட வனப் பயிற்சி கல்லூரியிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, சேதமடைந்த மரங்களை அறுத்து அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன்.