நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் விண்ணப்பித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படவில்லை.
நாகை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியத்தில், 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களிலிருந்து கடந்த 2016-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்கள், திருமணம் முடிந்ததும், தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தின்கீழ், விண்ணப்பம் செய்திருந்தனர்.
இதில், 50 சதவீதத்தினருக்கு திருமண உதவித்தொகையும், ஒரு பவுன் தங்கக் காசும் கிடைத்துள்ளது. மீதமுள்ள பெண்களுக்கு இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லையாம். இதுகுறித்து மாதிரவேளுர் கிராமம், மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர் ரேணுகாதேவி (25) கூறுகையில், பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. மறுநாளே திருமண உதவித்தொகை கேட்டு அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பித்தேன். ஆனால், இதுவரை எனக்கு திருமண உதவித்தொகை கிடைக்கவில்லை. என்னைப் போல கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த 400 பட்டதாரி பெண்களுக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.