நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு ரூ. 13.41 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், வருவாய்த் துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதி மூலம் ரூ. 11 லட்சம் மதிப்பில் நிவாரணத் தொகை காசோலைகள் உள்பட அரசின் பல்வேறு துறைகள் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ. 13.41 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழக அரசின் தூய்மைப் பள்ளி விருது பெற்ற காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், குரவப்புலம் பாயின்ட் காலிமர் பன்னாட்டுப் பள்ளித் தாளாளர், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வெட்டியக்காடு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரை ஆட்சியர் பாராட்டி, கெளரவித்தார்.
கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 240 மனுக்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்திலிருந்து 16 மனுக்களும் பெறப்பட்டுத் தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் வ. முருகேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எம். வேலுமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர். விக்டர் மரிய ஜோசப், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.