நாகை மாவட்டம், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையம் அருகில் 2 இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதன்கிழமை ஒன்றிணைந்த பொதுமக்கள், வணிகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், அந்தக் கடையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை: இதைத்தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் து. விஜயராகவன், மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். வெங்கேடசன் ஆகியோர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பின்னர், டாஸ்மாக் கடை அமைப்பது தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் கோ. தேன்மொழி கூறியதையடுத்து, முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் வேலு.குபேந்திரன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் காளிதாசன், பாட்டாளி மக்கள் கட்சி நாகை மேற்கு மாவட்டச் செயலாளர் விமல், தமுமுக மாவட்டச் செயலாளர் ஷேக் அலாவுதீன், மாவட்டப் பொருளாளர் பி.எம். பாஷித், சமூக ஆர்வலர் ஜனதா. பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.