நாகூர் அருகே புதன்கிழமை, வளப்பாற்றில் தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளப்பாறு மூலம் பாசனம் பெறும் நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வாழ்குடி,திருப்பயத்தான்குடி, விற்குடி, வாழ்குடி, விரபெருமாநல்லூர், பில்லாளி, காரையூர் ஆகிய கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணி செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு, இதுவரை இக்கிராமங்களுக்கு காவிரி தண்ணீர் வராததால், விவசாய நிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை கங்களாஞ்சேரி பாலம் அருகே விவசாயி சுந்தர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வளப்பாற்றில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்த நாகை வட்டாட்சியர் இளங்கோவன், நாகூர் காவல் ஆய்வாளர் குலோத்துங்கன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கட்டுப்படாத விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர். இதையடுத்து, ஓரிரு நாள்களில் வளப்பாற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறையினர் மீண்டும் நடத்திய பேச்சுவார்த்தையில் விவசாயிகள் சமாதானமடைந்தனர். விவசாயிகளின் மறியல் போராட்டத்தால், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.