தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கள்ளிமேடு ஊராட்சியில் பொதுப்பணித் துறை சார்பில் அடப்பாற்றின் குறுக்கே ஆசிய வங்கி வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 9.6 கோடி மதிப்பில் கட்டுப்படும் புதிய இயக்கு அணை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் வண்டல்-அவரிக்காடு இணைப்புப் பாலத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கோடிவிநாயக நல்லூருக்குச் சென்ற ஆட்சியர் கடைமடை இயக்கு அணைகளைப் பார்வையிட்டு, அங்கிருந்துப் பாசனத்துக்கு தேவையான நீரைத் திறந்து விடுவது குறித்துப் பொதுப்பணித் துறையினருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் திருவேட்டைச் செல்வம், இணை இயக்குநர் வேளாண்மை நாராயணசாமி, உதவி செயற் பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், உதவிப் பொறியாளர்கள் கமலக்கண்ணன், சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.