நாகை மாவட்டத்தில் உள்ள தொழில்சார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாகை மாவட்ட ஆட்சியரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும், கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பொதுமக்கள்அல்லாத பிற தனியார் நிறுவனங்களும் அன்றாடத் தேவைகளுக்கு குடிநீர் இணைப்பு பெற்று பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்புக்காக விண்ணப்பங்கள் பெற்று பரிசீலனை செய்யும் பணி நடைபெறுகிறது. எனவே, குடிநீர் இணைப்பு தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கலந்தாய்வு நாகை வெளிப்பாளையம், பொது அலுவலக சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அக்.4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்று உரிய விளக்கங்களைப் பெற்று விண்ணப்பங்களைஅளிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு நாகை வெளிப்பாளையம், பொது அலுவலக சாலையில் உள்ள நிர்வாகப் பொறியாளர்அலுவலகத்தை செல்லிடப்பேசி எண் 9842454202-லும், மயிலாடுதுறை முத்து வக்கீல் சாலையில் உள்ள உதவி நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தை செல்லிடப்பேசி எண் 8248923645-லும் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.