நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கருவாழக்கரை அழகுஜோதி அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளியில், மாநிலங்களுக்கிடையேயான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (செப்.20) தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டி சனிக்கிழமை (செப். 22) நிறைவு பெறுகிறது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள 150 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 3000 பேர் பங்கேற்றுள்ளனர். மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் கோ.தேன்மொழி போட்டியை தொடக்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சாய் சிறப்பு சரக விளையாட்டு மையத்தின் கபடி மற்றும் கோ-கோ விளையாட்டுப் பயிற்சியாளர் அனந்த கிருஷ்ணன் பங்கேற்றுப் பேசினார். பள்ளியின் தலைவர் ஏ.கண்ணன் தலைமை வகித்தார். தாளாளர் சிவக்குமார், முதல்வர் நோயல் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.