நீதிமன்ற அனுமதியுடன் மயிலாடுதுறையில் இயற்கை வளம் மற்றும் கனிமவள பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கை: மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செப். 23-ஆம் தேதி நடைபெற இருந்த தமிழ்நாடு இயற்கை வளம் மற்றும் கனிமவள பாதுகாப்பு மாநாட்டுக்கு அனுமதி கோரி ஆக. 27-ஆம் தேதி காவல் துறைக்கு கடிதம் அளிக்கப்பட்டது.
இதற்கு, காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்பதால், உயர்நீதிமன்றத்தில் ரிட் (பொதுநல) மனுத்தாக்கல் செய்யப்பட்டு அனுமதி கோரப்பட்டது. மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம் சட்டத்துக்குள்பட்டு மாநாடு நடத்துவதற்கு அனுமதியளிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 30 (2) சட்டப் பிரிவு செப். 6-ஆம் தேதி முதல் மயிலாடுதுறையில் நடைமுறையில் இருப்பதாகக் கூறி மாநாட்டுக்கு அனுமதி மறுத்துள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மண் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு காவிரிப் படுகை பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக ஒன்றுபட்டு நிற்க தயாராக உள்ளனர். இதை, அரசும், காவல்துறையும் ஏற்க மறுக்கிறது. எனவே, இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து அனுமதி பெற்று விரைவில் மாநாடு நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.