பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டம், திருமருகலில் திராவிடர் கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், அவமதிப்பு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருமருகல் பேருந்து நிலையம் முன்பாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூபேஸ் குப்தா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நெப்போலியன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மறியலில் பங்கேற்ற 2 பெண்கள் உள்பட 15 பேரை திட்டச்சேரி போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக, நாகை - நன்னிலம் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.