மயிலாடுதுறை வடக்கு ராமலிங்க அக்ரஹாரத்தில் 64-ஆம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீமங்கள விநாயகர் சன்னிதியில் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, கும்பகோணம் ஈ.கே. ஜெயராம பாகவதர், டைகர் சுப்பிரமணிய பாகவதர், உடையாளூர் கே. கல்யாணராம பாகவதர், பலராம பாகவதர், திருவண்ணாமலை பிச்சுமணி பாகவதர், மாயூரம் ஞானகுரு பாகவதர் மற்றும் வித்வான்களின் கீதகோவிந்தம் நடைபெற்றது.
பின்னர், இரவில் காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் மாண்டலின் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை அஷ்டபதி பஜனை மற்றும் திவ்யநாம பஜனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீரகுமாயி சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமிக்கு ஸ்ரீராதாகல்யாணம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் பஜனை பாடல்களை பாடி, வழிபாடு செய்தனர்.
மாலை ஸ்ரீபாண்டுரங்க சுவாமி, ஸ்ரீஆஞ்சநேய சுவாமிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. இரவு மகாநதி ஷோபனா விக்னேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.