மயிலாடுதுறை ஸ்ரீகாளிங்கநர்த்தன கிருஷ்ண பரமாத்மா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயிலடி, மேலஒத்தசரகு தெருவில் உள்ள இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, சனிக்கிழமை (பிப்.16) ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் ஆகியவற்றுடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை காலசந்தி பூஜை, மகா சாந்தி ஹோமம், உத்ஸவர் திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்று, விமான கலசம் நிறுவப்பட்டது. பின்னர், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற மூன்றாம் கால யாகசாலை பூஜையில், கோபூஜை, விமானம் கண்திறப்பு உள்ளிட்ட பிரதான ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதில், சூரியனார்கோவில், ஸ்ரீகந்த பரம்பரை ஸ்ரீசிவாக்கிரயோகிகள் ஆதீனம் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பின்னர், திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், கடம் புறப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து, விமானத்தை அடைந்தது. அங்கு, திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் இளவரசு ஸ்ரீமத் திருஞானசம்பந்தம் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில், விமான குடமுழுக்கு மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோனேரிராஜபுரம் எஸ். சம்பத் குமாரப் பட்டாச்சாரியார், கோழிகுத்தி எம்.எஸ். வரதராஜ பட்டாச்சாரியார் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டி தலைவர் ஜி. ஸ்ரீதரன், செயலாளர் கே. சரவணபவ, பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினரும், தெருவாசிகளும் செய்திருந்தனர்.